Tuesday, May 24, 2011

இலக்கணமற்ற சிறைக்கொடுமைகளின் இலக்கிய பதிவாய் விடுதலைக்கு விலங்கு புத்தகம் -பிரான்ஸிருந்து முனைவர் தமிழீழநாதன்.


ஒருபுத்தகம் படித்த வாசகனை, அந்த புத்தகத்தை வாசித்து முடிப்பதற்குள் அவன் மனதில் ஒரு உளவியல் மாற்றத்தை
 உண்டுபண்ணுமா? என்ற பொதுவான கேள்விக்கு விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்து முடித்தவனாய் நான் தரும் பதில், விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்தவன், படித்து முடிப்பதற்குள் ஒரு மிகச்சிறந்த தமிழ் உணர்வுடைய சிந்தனையாளனாய் உளவியல் மாற்றத்திற்கு உட்படுவான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்புத்தகத்தை படித்த அவன் கண்கள் கண்ணீரை சுமக்கும் அவன் இதயம் ஆற்றொண்ணா சோகத்தில் தவிக்கும். அவன் உயிர்நாடி விடுதலை உணர்வை நாடி துடிக்கும். காவல்த்துறைமீதும் நீதித்துறைமீதும் அவன் வைத்து இருக்கும் நம்பிக்கையை நிராகரிப்பான். இவைஅனைத்தும் இப்புத்தகத்தை வாசித்த அவனுள்ளே நடக்கும்.

முதலில் ஒரு தமிழ் உணர்வாளனாய், விடுதலை சிந்தனையாளனாய், சீமானின் லட்சோப லட்ச தம்பிகளில் ஒருவனாய், இந்த மண்ணில் வாழ்கின்ற இனமானமிக்க உறவுகளின் உள்ளமாய் களம் வெளியீட்டாளருக்கு கண்ணீர் கலந்த கொடுமையை வெளியிட்டமைக்காகவும் நன்றி. ராசீவ் காந்தி கொலை என்ற ஒற்றை சிந்தனையால் மட்டும் தமிழ் இனத்தை அழிக்க நினைக்கின்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் உங்களின் துணிவுடன் கூடிய பணி பாராட்டுக்கு அப்பாற்ப்பட்டது.

மாவீரன் பகத்சிங் அவர்களின், ஒரு சமுதாய போராளியின் மனதில் உள்ள மிக நாயமான கருத்துக்களையும், ஒரு மாவீரனின் உண்மையான சிந்தனைகளையும் தொடக்கமாக கொண்டு இந்த 168  பக்க ஒரு தமிழனாய் பிறந்த தனிமனித பாடுகளை சுமந்த ஏடுகள். வாழ்க்கையில் சுந்தரக்காண்டத்தை சுவைக்க விரும்பிய ஒரு இனமானம் மிக்க தமிழனின் வாழ்க்கையில் அரச பயங்கரவாதம் அள்ளித்தெளித்த வனவாசத்தை வாக்கியம் வாக்கியமாய், ஒரு சலனமற்ற தெளிந்த நீரோடையைபோன்று தெளிவாக சொல்கிறது இந்த விடுதலைக்கு விலங்கு புத்தகம்

அய்யா தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களின் முத்தாய்ப்பான பதிப்புரை மற்றும் அண்ணன் தடா சந்திரசேகர் அவர்கள் இந்த நூல் எப்படி உருவானது என்றும், இந்தநூல் உருவாகவேண்டிய அவசியம் ஆகியவற்றை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளார். அண்ணன் தடா சந்திரசேகர் சொன்னது போல இந்த நூல் ஆயுள் தண்டனை கைதியாக வஞ்சனைவலையில் சிக்கிய இராபர்ட் பயாஸ் அவர்களின் இறந்தகால சிறை அனுபவங்களாக மட்டும் இருக்காது. அதையும் தாண்டி காவல் துறையினர்களின் தலைமை காவலர்களின் மற்றும் நீதிதேவதையின் கண்களை இறுகக் கருப்பு துணியால் கட்டிவிட்ட பிறகு அந்த நீதிதேவதையின் எதிரே பல அப்பாவிகளை தண்டிக்கும் நீதியரசர்களின் மனதில் மறைந்து போன மனிதநேயத்தின் சாட்சியாகவும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்க்கு அடுத்ததாக மிகசிறந்த களப்போராளியாக எங்களுடன் களத்திலும், மிகச்சிறந்த தனது எழுத்தினால் அறிவுத் தளத்திலும் அரும்பணி ஆற்றிகொண்டிருக்கும் அண்ணன் மணிசெந்தில் அவர்களின் எழுதுகோல் குருதிப் பெருக்கின் நனைந்த விதத்தை சொல்லி எங்களின் மனதை உறுதிப்பெருக்கில் நிரப்புகின்றார். இந்த நூலின் அழகிய தொகுப்பும், கருத்துகளின் அணிவகுப்பும் அவரின் அயராத உழைப்பால் விளைந்தவை என்பதை வாசிப்பவர்கள் உணர்வார்கள். இவரை தொடர்ந்து அண்ணன் அறிவுசெல்வன் அவர்களின் ராசீவ் காந்தி மரணம்... மறுக்கப்பட்ட நீதி.. என்று தலைப்பின் கீழ் ஒரு தெளிந்த வழக்கறிஞர் அவர்களுக்கே உரிய நடையில் நூலின் சிறப்பை பதிவு செய்திருக்கிறார்.

முனைவர் பால் நுமன் அவர்களுடைய இரத்தின சுருக்கமான ராசீவ் காந்தி கொலை விசாரணை , மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்கின் போக்கு ஆகியவற்றை எடுத்துவைத்துள்ளார். அவர் கூறியுள்ள மார்டின் லூதர்கிங் அவர்களுடைய பொன்மொழியில் பொதிந்துள்ள கருத்துக்கள் மிகவும் அருமை.

அடுத்ததாக அய்யா கா. அய்யாநாதன் அவர்கள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கும் நியாயமான குரல் என்ற தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். இவர் இங்கே பதிவு செய்தவை ராசீவ் காந்தி கொலையில் இதுவரை யாரும் பார்த்திராத பார்வை. ஒருகுற்றம் சுமத்தப்பட்டு, அதற்காக நீதியரசர்கள் வழங்கிய தவறான தீர்ப்பால் அண்ணன் ராபர்ட் பயாஸ் அனுபவித்த கொடுமைகளை இந்த நூல் சித்தரித்தாலும் குற்றமே தவறானது என்று பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லுகின்றார். ராசீவ் காந்தி கொலைவழக்கில் ஒரு சர்வதேச சதி பின்னப்பட்டு இருப்பதையும், அந்த சர்வதேசச் சதி நிகழ்ந்த பின்னர் அந்த சதிக்கான காரணகர்த்தாவாக தமிழினம் அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். போர்க்களத்தில் தமிழனை வெல்ல முடியாத கயவர்கள் சதியை உருவாக்கி தமிழ் சாதியை அழிக்க நினைத்துள்ளனர் என்பதை மிகப்பெரிய பாரத தேசத்தின் பிரதமர் வரும்போது செய்யப்பட்டு இருந்தால் பாதுக்கப்பின் குளறுபடிகள், குண்டு வெடிப்பின்போது போது உடனில்லாத பாதுகாப்பு அதிகாரிகள் மற்று காங்கிரஸ் பெரும் தலைவர்கள் இவர்களின் வாயிலாக அரங்கேற்றப்பட்ட சர்வதேச சதி ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்த கொலைவழக்கில் உப்பை தின்னவர்கள் யாரோ இருக்க அதற்கான தண்ணீரை நம் தமிழ்ச்சாதி தனது செந்நீராலும், கண்ணீராலும் நிறைவு செய்துகொண்டிருக்கின்றது என்ற உண்மையை தெளிவாக விளக்கியுள்ளார்.

அடுத்ததாக அண்ணன் சீமான்

கொஞ்சம் சித்ரவதை
கொஞ்சம் அடக்குமுறை
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் இரத்தம்
கொஞ்சம் துயரம்
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்னை
கொஞ்சம் அவமானம்
இப்படி துரத்துகிற வாழ்க்கை

என்று சிறையில் வாடும் அண்ணன் இராபர்ட் பயாஸ் அவர்களின் நொந்துபோன இதயத்திற்கு ஆறுதலை வீசுகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை அண்ணனின் இந்த வரிகள் இந்த புத்தகத்தை வாசித்த பிறகு இனமானம் உள்ள தமிழ்த் தம்பிகள் அடைய போகின்ற சொல்ல முடியாத சோகத்தை குறைக்கவும் அவர்களின் மனதில் விடுதலை உணர்வை வீரியபடுத்தவும் சொல்லப்பட்டதாகவே உண்கிறேன். இந்த நூலை வாசித்த தம்பிகள் இதயத்தில் சுமக்கபோகிற ரணத்தின் வலியினை தனது மெல்லிய வார்த்தைகளால் குறைத்து, எங்களையெல்லாம் வழிநடத்தும் ஒரு அற்புதத் தளபதியாக உன்கனவு நனவாகும் எனச் சொல்லி நம்பிக்கையுட்டுகிறார்

அடுத்ததாக அண்ணன் இராபர்ட் பயாஸ் இவர்களால்... இதுவரையில்... நான்... என் முகப்புரையை வைக்கின்றார். விடுதலைக்கு விலங்கு புத்தகம் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு முதல் பாகத்தில் பதினோரு அத்தியாயங்களாக தனது சிறைச்சாலை கொடுமைகளை குறிப்புகளாக எழுதி வைத்திருந்தவற்றை அண்ணன் மணி செந்தில் தமக்கே உரிய மிகச்சிறந்த எழுத்தாற்றலினால் கண் முன் தோன்றும் திரைக்காட்சிகளாக வடித்து இருக்கின்றார். முதல் அத்தியாயம்

விழிநீர் துடைக்கின்ற விரல்களைத்தேடி எனத்தொடங்கி    
துயர்வால்வில் சூழ்ந்த இருள்...,
வலி துயர் வேறொன்றுமில்லை...,
கொடும் வலிதந்த துயர்வெளி...,
அலைக்களிப்பின் இருட்பாதையில்...,
காண்பதெல்லாம் காட்சியல்ல...,
வெளிச்சபுள்ளிகள் தீர்ந்த வானத்தில்...,
வேர்கள் சுமந்த வலி...,
விடுதலைக்கு விலங்கு...,
உலர்ந்த தூரிகையில் இன்னும் வரையபடாத ஓவியங்கள்..., முடிவிலியான முடிவில்...,
என் அற்புதமான தலைப்புகளில் இராபர்ட் பயஸ் அவர்களின் இருபது ஆண்டுகால
சிறைக்கொடுமைகளை, தனது ஏக்கங்களை, தனது எதிபார்ப்புகளை, தனது துயரங்களை சிறிதும் மிகைப்படுத்தாமல் இலக்கிய வடிவில் பதிவு செய்து இருகின்றார் .

அரச பயங்கரவாதமும், தடாசட்டமும் வேண்டுமென்றே சுமத்திய குற்றங்களையும், அந்த குற்றங்களில் காணப்படும் முன்னுக்கு பின்னான முரண்களையும் மிகவும் எளிமைபடுத்தி பாகம் இரண்டாக
ராசீவ் கொலைவழக்கு... முரண்களும்... உண்மைகளும்... என்ற தலைப்பின்கீழ் தனியேவும் தந்துள்ளார்.

பாகம் மூன்றில்

உள்ளத்தில் இருந்து உண்மையாய் சில உணர்வுகள்... என்ற தலைப்பின் கீழ் தந்துள்ளார். இந்த பகுதியில் இராபர்ட் பயஸ் அவர்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய்தமிழக மக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றார் என்பதையும், நாம் இதுவரை என்ன செய்தோம், நாம் என்ன செய்ய தவறினோம் என்பதை கனத்த இதயத்தோடு சொல்லி படிக்கும்
வாசகர்களை எல்லாம் கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறார்:

இந்த புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதில் சொல்லி இருக்கின்ற கொடுமைகளையும் என்னால் வார்த்தையில் விவரிக்கமுடியவில்லை. அரச பயங்கரவாத சட்டத்தின் கோர கைகளில் சிக்கிய அண்ணன் ராபர்ட் பயாஸ் அவர்களின்வாழ்க்கையில் பட்ட பாட்டினையும், கொடுமைகள் நிகழும்போது அவர் துடித்த துடிப்பினையும் துளியும் மிகைபடுத்தாமல் அண்ணன் மணி செந்தில் வார்த்தைகளால் வடித்துள்ளார்.  பயஸ் அவர்கள் சிறையில் பட்டப் பாட்டினை சுமந்த இந்த ஏட்டினை படித்தபிறகு நான் பட்ட பாட்டினை என்னால் எழுதமுடியவில்லை.

சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைகளால் அலங்கரிக்க பட்ட பிரஞ்சு நாட்டின் கிரிநோப்ல் மாநகரில் இருந்து இப்புத்தகத்தை படிக்க நேர்ந்தது. எப்போதும் குரல்வளை நெரிக்கும் குளிரால் நிரம்பிய எனது அறை, இப்புத்தகத்தை படித்து முடித்தபிறகு அனலாய் சுட்டது. சுட்டது அறை மட்டும் அல்ல, தமிழனாய் பிறந்த எனது ஆற்றாமையும்தான். ஒவ்வொரு அத்தியாயத்தை படித்து முடிக்கபோகும் தருவாயில் எனது கண்கள் கண்ணீரை சொரிந்ததை நான் மட்டுமே அறிவேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் ஒரு பொன்மொழியோடு ஆரம்பித்து முடியும்போது புண்ணின் வலியாய் இதயத்தை சுட்டது.ஒரு அடர்ந்த சோகத்தை தாங்கி ஓடிவரும் தெளிந்த நீரோடையை போன்று ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கின்றது.
ஒருமனிதன் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை இவ்வளவு நலினமாக, எந்தவிதமான கொடுஞ்சொல் இன்றியும் பதிவு
செய்யவேண்டுமானால் அந்த மனிதனின் மனது எவ்வளவு பக்குவ பட்டிருக்கவேண்டும் என்பது புத்தகத்தை வாசித்த
உள்ளங்களுக்கு தெரியும்.

இதைத்தான் அண்ணன் சீமான் தனது முகப்பின் பதிவில் நீ சிறையில் இருந்தாலும் பற்றோடு இருகிறாய்...     என்று தெளிவாக சொல்லி இருகின்றார்.

இறுதியாக மீண்டும் ஒருமுறை களம் வெளியீட்டாளர்களுக்கு தமிழ் உணர்வாளர்களில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். இன்றைய சூழலில்  தமிழகத்தில் வரலாறு திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இனமானம் மிக்க இளைஞர்களின் கடும் உழைப்பினாலும், கருத்தாழம் மிக்க அண்ணன் சீமானின் தேர்தல் பரப்புரையாலும் , இன எதிரி காங்கிரஸ் தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டது.இனத் துரோகி கருணாநிதியின் தலைமை எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாத
இழிநிலைக்கு தள்ளப்பட்டு இருகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் தமிழனுக்கு செய்த துரோகம் என்பதை
இன்றுவரை எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. இந்த சூழல் எங்களுக்கு களம் அமைத்துகொடுத்த வெளியீட்டாளருக்கு
நன்றி.

மேலும் இனமானம் மிக்க சீமானின் தம்பிகளாகிய நமக்கு மன்றும் ஒரு கடமை நம் கண்முன்னே காத்து கிடக்கின்றது. இந்த புத்தகத்தை நாம் படித்து நமது வீட்டில் வைத்து இருக்கும் அதேவேளையில் தமிழ் நாட்டில் உள்ள நடுநிலை சிந்தனையாளர்கள் அனைவரின் கைகளிலும் இதை கொண்டுபோய் சேர்க்கவேண்டியது அவசியம்.
இதை படிக்கும் நடுநிலையாளர்கள் மனதில் உறுதியான ஒரு உளவியல் மாற்றம் நிகழும் .
மேலும் ராஜீவ் காந்தியை தமிழினம் பேசுபவர்கள் கொன்றுவிட்டார்கள் என்று பேசித்திரியும் காங்கிரஸ் காரர்களிடம் அய்யா அய்யாநாதன் அவர்களின் முகப்புரையாவது படிக்க சொல்லி உங்கள் தலைவரை கொன்றது நாங்கள் இல்லை ஒரு சர்வதேச சதி என்று புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லவேண்டும். இதுப் போன்ற நூலை உருவாக்குவதும், அதை வாசிப்பதும் கூட ஒருவகையான களப்பணிதான் என்பதை படித்தவர்களிடம் ஏற்ப்படும் உளவியல் மாற்றமே உணர்த்தும்.

மொத்தத்தில் விடுதலைக்கு விலங்கு புத்தகம் அண்ணன் ராபர்ட் பயாஸ் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இலக்கணமற்ற சிறைக்கொடுமைகளின்  இலக்கியப்பதிவாய் அமைந்திருக்கின்றது.

வாசியுங்கள்.உணருங்கள். சிறையில் அடைப்பட்டு கிடக்கும் ராசீவ் படுகொலை வழக்கில் சிக்குண்ட தமிழர்களை விடுவிக்க துணியுங்கள்.

No comments:

Post a Comment