Tuesday, May 24, 2011

இலக்கணமற்ற சிறைக்கொடுமைகளின் இலக்கிய பதிவாய் விடுதலைக்கு விலங்கு புத்தகம் -பிரான்ஸிருந்து முனைவர் தமிழீழநாதன்.


ஒருபுத்தகம் படித்த வாசகனை, அந்த புத்தகத்தை வாசித்து முடிப்பதற்குள் அவன் மனதில் ஒரு உளவியல் மாற்றத்தை
 உண்டுபண்ணுமா? என்ற பொதுவான கேள்விக்கு விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்து முடித்தவனாய் நான் தரும் பதில், விடுதலைக்கு விலங்கு புத்தகத்தை படித்தவன், படித்து முடிப்பதற்குள் ஒரு மிகச்சிறந்த தமிழ் உணர்வுடைய சிந்தனையாளனாய் உளவியல் மாற்றத்திற்கு உட்படுவான் என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்புத்தகத்தை படித்த அவன் கண்கள் கண்ணீரை சுமக்கும் அவன் இதயம் ஆற்றொண்ணா சோகத்தில் தவிக்கும். அவன் உயிர்நாடி விடுதலை உணர்வை நாடி துடிக்கும். காவல்த்துறைமீதும் நீதித்துறைமீதும் அவன் வைத்து இருக்கும் நம்பிக்கையை நிராகரிப்பான். இவைஅனைத்தும் இப்புத்தகத்தை வாசித்த அவனுள்ளே நடக்கும்.

முதலில் ஒரு தமிழ் உணர்வாளனாய், விடுதலை சிந்தனையாளனாய், சீமானின் லட்சோப லட்ச தம்பிகளில் ஒருவனாய், இந்த மண்ணில் வாழ்கின்ற இனமானமிக்க உறவுகளின் உள்ளமாய் களம் வெளியீட்டாளருக்கு கண்ணீர் கலந்த கொடுமையை வெளியிட்டமைக்காகவும் நன்றி. ராசீவ் காந்தி கொலை என்ற ஒற்றை சிந்தனையால் மட்டும் தமிழ் இனத்தை அழிக்க நினைக்கின்ற ஊடகவியலாளர்கள் மத்தியில் உங்களின் துணிவுடன் கூடிய பணி பாராட்டுக்கு அப்பாற்ப்பட்டது.

மாவீரன் பகத்சிங் அவர்களின், ஒரு சமுதாய போராளியின் மனதில் உள்ள மிக நாயமான கருத்துக்களையும், ஒரு மாவீரனின் உண்மையான சிந்தனைகளையும் தொடக்கமாக கொண்டு இந்த 168  பக்க ஒரு தமிழனாய் பிறந்த தனிமனித பாடுகளை சுமந்த ஏடுகள். வாழ்க்கையில் சுந்தரக்காண்டத்தை சுவைக்க விரும்பிய ஒரு இனமானம் மிக்க தமிழனின் வாழ்க்கையில் அரச பயங்கரவாதம் அள்ளித்தெளித்த வனவாசத்தை வாக்கியம் வாக்கியமாய், ஒரு சலனமற்ற தெளிந்த நீரோடையைபோன்று தெளிவாக சொல்கிறது இந்த விடுதலைக்கு விலங்கு புத்தகம்

அய்யா தமிழ் முழக்கம் சாகுல்அமீது அவர்களின் முத்தாய்ப்பான பதிப்புரை மற்றும் அண்ணன் தடா சந்திரசேகர் அவர்கள் இந்த நூல் எப்படி உருவானது என்றும், இந்தநூல் உருவாகவேண்டிய அவசியம் ஆகியவற்றை மிகவும் தெளிவாக பதிவு செய்து உள்ளார். அண்ணன் தடா சந்திரசேகர் சொன்னது போல இந்த நூல் ஆயுள் தண்டனை கைதியாக வஞ்சனைவலையில் சிக்கிய இராபர்ட் பயாஸ் அவர்களின் இறந்தகால சிறை அனுபவங்களாக மட்டும் இருக்காது. அதையும் தாண்டி காவல் துறையினர்களின் தலைமை காவலர்களின் மற்றும் நீதிதேவதையின் கண்களை இறுகக் கருப்பு துணியால் கட்டிவிட்ட பிறகு அந்த நீதிதேவதையின் எதிரே பல அப்பாவிகளை தண்டிக்கும் நீதியரசர்களின் மனதில் மறைந்து போன மனிதநேயத்தின் சாட்சியாகவும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்க்கு அடுத்ததாக மிகசிறந்த களப்போராளியாக எங்களுடன் களத்திலும், மிகச்சிறந்த தனது எழுத்தினால் அறிவுத் தளத்திலும் அரும்பணி ஆற்றிகொண்டிருக்கும் அண்ணன் மணிசெந்தில் அவர்களின் எழுதுகோல் குருதிப் பெருக்கின் நனைந்த விதத்தை சொல்லி எங்களின் மனதை உறுதிப்பெருக்கில் நிரப்புகின்றார். இந்த நூலின் அழகிய தொகுப்பும், கருத்துகளின் அணிவகுப்பும் அவரின் அயராத உழைப்பால் விளைந்தவை என்பதை வாசிப்பவர்கள் உணர்வார்கள். இவரை தொடர்ந்து அண்ணன் அறிவுசெல்வன் அவர்களின் ராசீவ் காந்தி மரணம்... மறுக்கப்பட்ட நீதி.. என்று தலைப்பின் கீழ் ஒரு தெளிந்த வழக்கறிஞர் அவர்களுக்கே உரிய நடையில் நூலின் சிறப்பை பதிவு செய்திருக்கிறார்.

முனைவர் பால் நுமன் அவர்களுடைய இரத்தின சுருக்கமான ராசீவ் காந்தி கொலை விசாரணை , மற்றும் ஜோடிக்கப்பட்ட வழக்கின் போக்கு ஆகியவற்றை எடுத்துவைத்துள்ளார். அவர் கூறியுள்ள மார்டின் லூதர்கிங் அவர்களுடைய பொன்மொழியில் பொதிந்துள்ள கருத்துக்கள் மிகவும் அருமை.

அடுத்ததாக அய்யா கா. அய்யாநாதன் அவர்கள் மானுடத்தின் மனசாட்சியை உலுக்கும் நியாயமான குரல் என்ற தனது கருத்தை பதிவுசெய்துள்ளார். இவர் இங்கே பதிவு செய்தவை ராசீவ் காந்தி கொலையில் இதுவரை யாரும் பார்த்திராத பார்வை. ஒருகுற்றம் சுமத்தப்பட்டு, அதற்காக நீதியரசர்கள் வழங்கிய தவறான தீர்ப்பால் அண்ணன் ராபர்ட் பயாஸ் அனுபவித்த கொடுமைகளை இந்த நூல் சித்தரித்தாலும் குற்றமே தவறானது என்று பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லுகின்றார். ராசீவ் காந்தி கொலைவழக்கில் ஒரு சர்வதேச சதி பின்னப்பட்டு இருப்பதையும், அந்த சர்வதேசச் சதி நிகழ்ந்த பின்னர் அந்த சதிக்கான காரணகர்த்தாவாக தமிழினம் அடையாளம் காட்டப்பட்டு இருக்கிறது என்பதையும் தெளிவாக விளக்குகிறார். போர்க்களத்தில் தமிழனை வெல்ல முடியாத கயவர்கள் சதியை உருவாக்கி தமிழ் சாதியை அழிக்க நினைத்துள்ளனர் என்பதை மிகப்பெரிய பாரத தேசத்தின் பிரதமர் வரும்போது செய்யப்பட்டு இருந்தால் பாதுக்கப்பின் குளறுபடிகள், குண்டு வெடிப்பின்போது போது உடனில்லாத பாதுகாப்பு அதிகாரிகள் மற்று காங்கிரஸ் பெரும் தலைவர்கள் இவர்களின் வாயிலாக அரங்கேற்றப்பட்ட சர்வதேச சதி ஆகியவற்றை மிகத்தெளிவாக விளக்கியுள்ளார்.

இந்த கொலைவழக்கில் உப்பை தின்னவர்கள் யாரோ இருக்க அதற்கான தண்ணீரை நம் தமிழ்ச்சாதி தனது செந்நீராலும், கண்ணீராலும் நிறைவு செய்துகொண்டிருக்கின்றது என்ற உண்மையை தெளிவாக விளக்கியுள்ளார்.

அடுத்ததாக அண்ணன் சீமான்

கொஞ்சம் சித்ரவதை
கொஞ்சம் அடக்குமுறை
கொஞ்சம் கண்ணீர்
கொஞ்சம் இரத்தம்
கொஞ்சம் துயரம்
கொஞ்சம் சோகம்
கொஞ்சம் பிரச்னை
கொஞ்சம் அவமானம்
இப்படி துரத்துகிற வாழ்க்கை

என்று சிறையில் வாடும் அண்ணன் இராபர்ட் பயாஸ் அவர்களின் நொந்துபோன இதயத்திற்கு ஆறுதலை வீசுகிறார். ஆனால் என்னை பொறுத்தவரை அண்ணனின் இந்த வரிகள் இந்த புத்தகத்தை வாசித்த பிறகு இனமானம் உள்ள தமிழ்த் தம்பிகள் அடைய போகின்ற சொல்ல முடியாத சோகத்தை குறைக்கவும் அவர்களின் மனதில் விடுதலை உணர்வை வீரியபடுத்தவும் சொல்லப்பட்டதாகவே உண்கிறேன். இந்த நூலை வாசித்த தம்பிகள் இதயத்தில் சுமக்கபோகிற ரணத்தின் வலியினை தனது மெல்லிய வார்த்தைகளால் குறைத்து, எங்களையெல்லாம் வழிநடத்தும் ஒரு அற்புதத் தளபதியாக உன்கனவு நனவாகும் எனச் சொல்லி நம்பிக்கையுட்டுகிறார்

அடுத்ததாக அண்ணன் இராபர்ட் பயாஸ் இவர்களால்... இதுவரையில்... நான்... என் முகப்புரையை வைக்கின்றார். விடுதலைக்கு விலங்கு புத்தகம் மூன்று பாகமாக பிரிக்கப்பட்டு முதல் பாகத்தில் பதினோரு அத்தியாயங்களாக தனது சிறைச்சாலை கொடுமைகளை குறிப்புகளாக எழுதி வைத்திருந்தவற்றை அண்ணன் மணி செந்தில் தமக்கே உரிய மிகச்சிறந்த எழுத்தாற்றலினால் கண் முன் தோன்றும் திரைக்காட்சிகளாக வடித்து இருக்கின்றார். முதல் அத்தியாயம்

விழிநீர் துடைக்கின்ற விரல்களைத்தேடி எனத்தொடங்கி    
துயர்வால்வில் சூழ்ந்த இருள்...,
வலி துயர் வேறொன்றுமில்லை...,
கொடும் வலிதந்த துயர்வெளி...,
அலைக்களிப்பின் இருட்பாதையில்...,
காண்பதெல்லாம் காட்சியல்ல...,
வெளிச்சபுள்ளிகள் தீர்ந்த வானத்தில்...,
வேர்கள் சுமந்த வலி...,
விடுதலைக்கு விலங்கு...,
உலர்ந்த தூரிகையில் இன்னும் வரையபடாத ஓவியங்கள்..., முடிவிலியான முடிவில்...,
என் அற்புதமான தலைப்புகளில் இராபர்ட் பயஸ் அவர்களின் இருபது ஆண்டுகால
சிறைக்கொடுமைகளை, தனது ஏக்கங்களை, தனது எதிபார்ப்புகளை, தனது துயரங்களை சிறிதும் மிகைப்படுத்தாமல் இலக்கிய வடிவில் பதிவு செய்து இருகின்றார் .

அரச பயங்கரவாதமும், தடாசட்டமும் வேண்டுமென்றே சுமத்திய குற்றங்களையும், அந்த குற்றங்களில் காணப்படும் முன்னுக்கு பின்னான முரண்களையும் மிகவும் எளிமைபடுத்தி பாகம் இரண்டாக
ராசீவ் கொலைவழக்கு... முரண்களும்... உண்மைகளும்... என்ற தலைப்பின்கீழ் தனியேவும் தந்துள்ளார்.

பாகம் மூன்றில்

உள்ளத்தில் இருந்து உண்மையாய் சில உணர்வுகள்... என்ற தலைப்பின் கீழ் தந்துள்ளார். இந்த பகுதியில் இராபர்ட் பயஸ் அவர்கள் தொப்புள் கொடி உறவுகளாகிய தாய்தமிழக மக்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றார் என்பதையும், நாம் இதுவரை என்ன செய்தோம், நாம் என்ன செய்ய தவறினோம் என்பதை கனத்த இதயத்தோடு சொல்லி படிக்கும்
வாசகர்களை எல்லாம் கண்ணீர் கடலில் ஆழ்த்துகிறார்:

இந்த புத்தகத்தில் இருக்கும் ஒவ்வொரு அத்தியாயத்தையும் அதில் சொல்லி இருக்கின்ற கொடுமைகளையும் என்னால் வார்த்தையில் விவரிக்கமுடியவில்லை. அரச பயங்கரவாத சட்டத்தின் கோர கைகளில் சிக்கிய அண்ணன் ராபர்ட் பயாஸ் அவர்களின்வாழ்க்கையில் பட்ட பாட்டினையும், கொடுமைகள் நிகழும்போது அவர் துடித்த துடிப்பினையும் துளியும் மிகைபடுத்தாமல் அண்ணன் மணி செந்தில் வார்த்தைகளால் வடித்துள்ளார்.  பயஸ் அவர்கள் சிறையில் பட்டப் பாட்டினை சுமந்த இந்த ஏட்டினை படித்தபிறகு நான் பட்ட பாட்டினை என்னால் எழுதமுடியவில்லை.

சுற்றிலும் ஆல்ப்ஸ் மலைகளால் அலங்கரிக்க பட்ட பிரஞ்சு நாட்டின் கிரிநோப்ல் மாநகரில் இருந்து இப்புத்தகத்தை படிக்க நேர்ந்தது. எப்போதும் குரல்வளை நெரிக்கும் குளிரால் நிரம்பிய எனது அறை, இப்புத்தகத்தை படித்து முடித்தபிறகு அனலாய் சுட்டது. சுட்டது அறை மட்டும் அல்ல, தமிழனாய் பிறந்த எனது ஆற்றாமையும்தான். ஒவ்வொரு அத்தியாயத்தை படித்து முடிக்கபோகும் தருவாயில் எனது கண்கள் கண்ணீரை சொரிந்ததை நான் மட்டுமே அறிவேன்.

ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பமும் ஒரு பொன்மொழியோடு ஆரம்பித்து முடியும்போது புண்ணின் வலியாய் இதயத்தை சுட்டது.ஒரு அடர்ந்த சோகத்தை தாங்கி ஓடிவரும் தெளிந்த நீரோடையை போன்று ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கின்றது.
ஒருமனிதன் தனக்கு நிகழ்ந்த கொடுமைகளை இவ்வளவு நலினமாக, எந்தவிதமான கொடுஞ்சொல் இன்றியும் பதிவு
செய்யவேண்டுமானால் அந்த மனிதனின் மனது எவ்வளவு பக்குவ பட்டிருக்கவேண்டும் என்பது புத்தகத்தை வாசித்த
உள்ளங்களுக்கு தெரியும்.

இதைத்தான் அண்ணன் சீமான் தனது முகப்பின் பதிவில் நீ சிறையில் இருந்தாலும் பற்றோடு இருகிறாய்...     என்று தெளிவாக சொல்லி இருகின்றார்.

இறுதியாக மீண்டும் ஒருமுறை களம் வெளியீட்டாளர்களுக்கு தமிழ் உணர்வாளர்களில் நன்றியை காணிக்கையாக்குகிறேன். இன்றைய சூழலில்  தமிழகத்தில் வரலாறு திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இனமானம் மிக்க இளைஞர்களின் கடும் உழைப்பினாலும், கருத்தாழம் மிக்க அண்ணன் சீமானின் தேர்தல் பரப்புரையாலும் , இன எதிரி காங்கிரஸ் தமிழகத்தில் இல்லாமல் போய்விட்டது.இனத் துரோகி கருணாநிதியின் தலைமை எதிர்க்கட்சியாக கூட இருக்க முடியாத
இழிநிலைக்கு தள்ளப்பட்டு இருகிறது. இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் தமிழனுக்கு செய்த துரோகம் என்பதை
இன்றுவரை எந்த ஊடகமும் பதிவு செய்யவில்லை. இந்த சூழல் எங்களுக்கு களம் அமைத்துகொடுத்த வெளியீட்டாளருக்கு
நன்றி.

மேலும் இனமானம் மிக்க சீமானின் தம்பிகளாகிய நமக்கு மன்றும் ஒரு கடமை நம் கண்முன்னே காத்து கிடக்கின்றது. இந்த புத்தகத்தை நாம் படித்து நமது வீட்டில் வைத்து இருக்கும் அதேவேளையில் தமிழ் நாட்டில் உள்ள நடுநிலை சிந்தனையாளர்கள் அனைவரின் கைகளிலும் இதை கொண்டுபோய் சேர்க்கவேண்டியது அவசியம்.
இதை படிக்கும் நடுநிலையாளர்கள் மனதில் உறுதியான ஒரு உளவியல் மாற்றம் நிகழும் .
மேலும் ராஜீவ் காந்தியை தமிழினம் பேசுபவர்கள் கொன்றுவிட்டார்கள் என்று பேசித்திரியும் காங்கிரஸ் காரர்களிடம் அய்யா அய்யாநாதன் அவர்களின் முகப்புரையாவது படிக்க சொல்லி உங்கள் தலைவரை கொன்றது நாங்கள் இல்லை ஒரு சர்வதேச சதி என்று புரிந்துகொள்ளுங்கள் என்று சொல்லவேண்டும். இதுப் போன்ற நூலை உருவாக்குவதும், அதை வாசிப்பதும் கூட ஒருவகையான களப்பணிதான் என்பதை படித்தவர்களிடம் ஏற்ப்படும் உளவியல் மாற்றமே உணர்த்தும்.

மொத்தத்தில் விடுதலைக்கு விலங்கு புத்தகம் அண்ணன் ராபர்ட் பயாஸ் அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த இலக்கணமற்ற சிறைக்கொடுமைகளின்  இலக்கியப்பதிவாய் அமைந்திருக்கின்றது.

வாசியுங்கள்.உணருங்கள். சிறையில் அடைப்பட்டு கிடக்கும் ராசீவ் படுகொலை வழக்கில் சிக்குண்ட தமிழர்களை விடுவிக்க துணியுங்கள்.

ஒரு கொடூர கொடுமையின் அழகான பதிவு - தமிழீழ நாதன்


என்னை பொறுத்தவரை அந்த புத்தகத்தை பற்றி சொல்ல வேண்டுமானால் "ஒரு அடர்ந்த சோகத்தை தொடர்ந்து
தாங்கிவரும் ஒரு சலனமற்ற நீரோடையின் ஓட்டமாக இருகின்றது". இன்னும் இயல்பாக சொல்லவேண்டுமானால்
"ஒரு கொடூர கொடுமையின் அழகான பதிவு" என்று சொல்லவேண்டும். ஒரு வரிகூட அலங்கரிக்க படாத எதார்த்தம் கொண்ட இயல்புத்தன்மை மாறாத தெளிவான சிந்தனைபதிவு.  

குருதிப் பெருக்கில் நனைந்த என் எழுதுகோல்... என்று தொடங்கும் முகப்பு மிகவும் சிறப்பு.  

இவர்களால்... இதுவரையில்... நான்... என்று தொடங்கும்போது ஒரு மிகப்பெரிய சோகத்தை... ஒரு வலியை இதயம் ஏற்க்கப்போகிறது என்ற எச்சரிக்கை தெரிகிறது.

பால் நியூமன் சொல்லுயிருக்கும் மார்டின் லூதர் கிங் உடைய செய்தி இதயத்தில் ஊசி ஏற்றுவதுபோல் அமைந்து இருகின்றது.  

விழிநீர் துடைக்கின்ற விரல்களைத் தேடி...   உலகின் நெடுநாள் அன்பும் ஆதரவும் சமுக இணைப்பும் இல்லாமல் தவிக்கும்
அண்ணன் இராபர்ட் பயாஸ் அவர்களின் மொத்த சோகத்தையும் தலைப்பிலேயே  சொல்லிவிட்டதுபோல இருகின்றது.
அதே பகுதியில்

11  ஆம் பக்கத்தில் பக்கத்தில் "உண்மையின் வெளிச்சத்தில் இருந்து தப்பிக்க முடியாத இருட்டாகும்"  என்ற சொல்லாடல் மிகவும் சிறப்பு. அதேபக்கத்தில் இறுதியில்  இராபர்ட் பயாஸ் அவர்களின் குழந்தையை கொன்றவிதத்தை பதிவு செய்து இருக்கும் விதம் இதயத்தை பிளப்பதாக அமைந்து இருகின்றது.

13 ஆம் பக்கத்தில் இறுதியில் இராபர்ட் பயாஸ் அண்ணன் "தான் மகனை பறிகொடுத்த ஒரு தந்தையின் மனதில் இயல்பாக எழும் துயரை மறைத்து, மிஞ்சியிருக்கும் என் குடும்பத்தின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிர்வாழ எண்ணியதுதான் மாபெரும் தவறு. என் மகனோடு நானும்போயிருக்கவேண்டும்" என தன்னை நொந்துகொள்ளும் போது என்னால் அழாமல் இருக்கமுடியவில்லை.  

14  ஆம் பக்கத்தில் பழமொழிக்கு அண்ணன் இராபர்ட் பயாஸ் மனநிலையில் இருந்து சொன்ன புது விளக்கம் நீதித்துறையை கண்ணத்தில் அறைந்ததுபோல் இருந்தது.

16  ஆம் பக்கத்தில் " இயற்க்கை மனிதன் தான்கிகொள்ளும் அளவிற்கே துன்பத்தை அளிகின்றது" என்று கூறும் இடத்தில் என்னால் தாங்கிக்கொள்ள முடியாத அளவிக்கான சோகம் குடிகொண்டது மனதில்.

17  ஆம் பக்கத்தில் சொல்ல பட்ட "வெளியே கொடூரமான இரவு துளித்துளியாய் விடிந்து கொண்டிருந்தது" என்று இரவு இராபர்ட் பயாஸ் அனுபவித்த கொடுமைகள் அனைத்தையும் ஒற்றை வாக்கியத்தில் சொல்லியிருக்கின்றது.

21  ஆம் பக்கத்தில் "உண்மையை கேட்பதற்கு ஒரு செவிகள் இல்லை ஆனால் பொய்யினை பரப்புவதற்கு ஆயிரம் உதடுகள் இருக்கின்றது" என்று சொல்லும் போது மொத்த சமூக அவலங்களையும் கோடிட்டு காட்டியுள்ளது.

26  ஆம் பக்கத்தில் சொல்லி இருக்கின்ற இராபர்ட் பயாஸ் அண்ணன் தனக்குள் கோங்கிய நாயமான கோபத்தை தனக்குள்ளாகவே அடக்கிகொண்ட விதம் ஒரு நாதியற்ற மனிதனின் அவனுக்குள்ளாகவே வன்மமாவதை உணரமுடிகின்றது.

28  ஆம் பக்கத்தில் சொல்லி இருக்கின்ற " மதிப்பிற்குரிய ஊடக துறை நண்பர்களே நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவது, தெரிந்துகொள்ள துடிப்பது செய்திகளையா ? உண்மைகளையா ?"   என்ற எனக்குள் நானே பலமுறை கேட்டுக்கொண்ட
கேள்விகள்.

33  ஆம் பக்கத்தில் கடுமையான வலிகளோடு கடத்தவேண்டிய இரவின் கொடுமைக்காக தனது அழகிய குடும்பத்தை
இராபர்ட் பயாஸ் நினைத்து கொள்ளுவது கண்களில் கண்ணீரையும், இதயத்தில் மூர்க்கத்தையும் என்னுள் ஏற்ப்படுத்தியது.

35  ஆம் பக்கத்தில் சொல்லப்பட்ட "தானாக அகப்பட்டதை இம்சித்து கொள்"   அருமையான தேர்வு.

36  ஆம் பக்கத்தில் " என்மகனை எப்போதாவது யாராவது காண நேர்ந்தால், அவன் விழிகளை உற்று பாருங்கள் அதில் வடியும் ஏக்கத்தை யாராலும் ஈடு செய்யமுடியாது"    ஒரு
தந்தையிடம் இருக்கும் தாய்மையின் பிரிவின் ஏக்கங்கள் கண்களை குளமாக்குகிறது.

37  ஆம் பக்கத்தில் " சிறைவாழ்க்கை என்பது .... எல்லாவித இயற்க்கை சமன்பாடுகளையும் கலைத்து போடும்
தண்டனையாக இருகின்றது" எனக்கூறும் போது அங்கே இளைக்க படும் கொடுமைகளை உணரமுடிகின்றது.

39  ஆம் பக்கத்தில் துவக்கத்தில் சொல்லி இருக்கின்ற " சலமில்லாமல் ஒரு கற்சிலைபோல்... என்னை சுற்றி வார்த்தைகள் பூசிகளைப்போல் பறந்து கொண்டிருந்தது"   இந்த புத்தகத்தை படித்த நேற்று எனது இரவும் இப்படித்தான் இருந்தது.

42  பக்கத்தில் " உலர்ந்த தூரிகைகளில் இன்னும் வரையப்படாத ஓவியங்கள் .... தலைப்பு மற்றும் தீபசெல்வன் அவரளின் வாசக தேர்வு சிறப்பு.

45  ஆம் பக்கத்தில் இராபர்ட் பயாஸ்  அண்ணன் அவர்கள் சீமான் படத்தை வரைந்து மாடியிருக்க்கின்றேன் என்றும் அதற்க்கான காரணத்தை சொல்லும் போது எனது அறையில் வைத்து இருக்கும் இரண்டு அண்ணன்களின் படமும் ( தேசிய தலைவர் + அண்ணன் சீமான் ) கண்ணீர் மறைத்த கண்களோடு பார்த்தேன்.

46  ஆம் பக்கத்தில் "அறிவுரைகழகம்" என்பதன் சுயரூபத்தை தோலுரித்த விதம் மிகவும் அருமை.

முரண்களும்... உண்மைகளும்  கீழ் உள்ள அனைத்து கூற்றுகளும் மிக தெளிவாக சட்டம்தெரியாத பாமரகளும் புரிந்துகொள்ளும்படியாக இருகின்றது.

60  பக்கம் தொடங்கும் " உள்ளத்தில் இருந்து உண்மையாய்  சில உணர்வுகள்...

இதன்கீழ் சொல்லப்பட்ட அனைத்தும் ஒரு மனித மனம் சுமந்த இரணத்தின் வெளிப்பாடு, இந்த சமுதாயம் ஒருவனுக்க அளித்த இரணங்களை தனக்குத்தானே ஜீரணித்து கொள்கின்ற விதம், இதனையும் தாண்டி ஒரு இனமானம் மிக்க மனிதன் தன்னை சார்ந்த சமூக உறவுகளிடத்தில் நோக்கும் எதிர்பார்ப்பு என முடிகின்றது.

கவித்துவம் நிறைந்த சொல்லாடல், உண்மையை சமூக எதார்த்த நிகழ்வோடு கனமாக பதிவு செய்து இருக்கும் விதம் என அனைத்தும் அருமை.

அரசியல் வழக்குகளில் தடா சட்டம் என்பது ஒரு விதமான சர்வாதிகாரமுறை என்பதை மிகவும் தெளிவாக சொல்லப்பட்டிருக்கின்றது

உண்மையில் இந்த புத்தகம் படித்த இரவு எனக்குள் ஏற்ப்பட்ட உளவியல் மாற்றத்தை சொல்லமுடியவில்லை.

படித்து முடித்த நேற்று இரவு கண்ணீர் சுமந்த எனது கண்கள் உறங்க மறுத்து விட்டது. சோகம் சுமந்த எனது இதயம், அதன் கட்டுபாட்டில் செயல்படும் வயிறு உணவு உன்ன மறுத்துவிட்டது. உண்மையில் 2009  இறுதி யுத்தத்தின்போது எனது ஆராய்ச்சி மாணவர் விடுதியில் எனது கையறு நிலையை நினைத்து, எனது கண்ணத்தில் நானே  அறைந்துகொண்ட நிகழ்வு நேற்று என்கண்முன் நின்றது.   பசியின் சோர்வையும், கண்ணின் சோகத்தையும் எனது தூக்கம் வெல்வதற்கு விடியல்காலம் ஆகிவிட்டது.

இந்த புத்தகம் அவசியம் தமிழகம் முழுதும் பரவேண்டும். கண்டிப்பாக இந்த புத்தகம் படிப்பவரிடம் ஒரு உளவியல் மாற்றத்தை உருவாக்கும்.


விடுதலைக்கு விலங்கு புத்தகத்திலிருந்து....


இந்த பரந்துபட்ட உலகில் எத்தனையோ கோடி மக்கள் வாழ்கின்றார்கள். இந்த உலகின் மூத்த இனமான தமிழ்த் தேசிய இனத்தின் 12 கோடி மக்கள் மானுட வளர்ச்சிக்காகவும் உலக உயர்விற்காகவும் தங்கள் கடமைகளை சிறப்பாக செய்கின்றனர். உலகத்தின் அனைத்து விதமான துயரங்களுக்கும் நாம் துடிக்கிறோம். போராடுகிறோம். ஆனால் நமது துயரம் குறித்து கேட்கக் கூட நாதியில்லை. உலகம் என்றைக்கும் நம்மை கருணையோடு பார்த்ததில்லை. அதன் தொடர்ச்சியாகவே நாங்கள் நிதமும் அடைகின்ற துயரங்களும், நியாயமற்ற நீண்ட சிறைவாசமும் உலகத்தின் பார்வைக்கு இதுவரை வந்ததில்லை. இந்த நேரத்தில் நான் நினைத்து துயரப்பட்டுக் கொள்ளும் செய்தி இருக்கிறது. நான் அடைந்த துயரங்கள் அனைத்தையும் தாண்டி எம் இனம் அடைந்த துயரங்களைப் பற்றி நான் பேசத் துணிந்த்தற்குக் காரணம் எம் துயரங்களுக்கும், எம் இனத்தின் துயரங்களுக்கும் முடிவாக இருக்கின்ற காரணங்களின் ஒற்றுமையேத் தவிர வேறல்ல.

என்னை சூழ்ந்திருக்கும் இந்த சுவர்களைத் தாண்டி… இந்த கரிய சிறையின் வழுவான மேற்கூரையைத் தாண்டி ஒரு வானம் இருக்கிறது. அந்த வானம் தான் இந்த நொடியில் என் தாய் நிலத்தையும் நான் வசிக்கின்ற இந்த நிலத்தையும் ஒருசேர பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த வானம்தான் என்னையும் என் தாய் நிலத்தில் வசிக்கின்ற எனது மகன், எனது தாய், எனது மனைவி மற்றும் உற்றார் உறவினர் ஆகியோரை இனைக்கின்ற ஒரேத் தொடர்பாக இருக்கிறது. அந்த வானத்தைத்தான் நான் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பார்த்துக் கொண்டு எனக்கு நானே ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

என் ஆழ் மனதின் ஏக்கமாக என் தாய் நிலமும், எனது உறவுகளும் இருக்கின்றார்கள். எனக்கென்று உங்களிடம் பகிர்ந்துகொள்ள ஒரு கனவு இருக்கிறது. நானும் ஒரு நாள் என் நிலத்திற்கு திரும்புவேன். மணலோடும் என் கடற்கரையில் காலார நடப்பேன். நிலா பொழுதுகளில் நாள் பால்யத்தில் விளையாடிய என் வீதிகளில் நான் நடந்துத் திரிவேன். உடலெங்கும் என் தாய் நிலத்தின் மண்ணை குழைத்து பூசிக் கொண்டு வெற்றுடம்போடு எம் நிலத்தில் கிடப்பேன். கனவு மெய்படும் பொழுதில்தான் நான் முதல்முதலாக சிரிப்பேன்.

உண்மையாய் சொல்கிறேன் உறவுகளே… தாய் மண்ணின் மீதான பற்றுதான், என்றாவது ஒருநாள் நான் என் நிலத்திற்குத் திரும்புவேன் என்ற நம்பிக்கைதான் என்னை இத்தனைத் துயரங்களைத் தாண்டியும் உயிருடன் வைத்திருக்கின்றன.

தாயக உறவுகளை நம்பி வந்த பிள்ளை நான். ஈழத்தமிழர்களாகிய நாங்கள் எப்போதும் சார்ந்திருப்பது இந்த மண்ணில் வாழக்கூடிய எம் தாய்தமிழ் உறவுகளைத்தான். அவர்கள் தான் நாங்கள் துயருறும் போதெல்லாம் துடித்தார்கள். எமக்கும், அவர்களுக்கும் மரபணு தொடர்ச்சியாக உறவு உண்டு. தொப்புள் கொடி பந்தம் உண்டு. உடன் பிறந்தவர்கள் நாங்கள். தமிழ் அன்னையின் கருப்பையில் தரித்த இரு குழந்தைகள் நாங்கள். ஈழ மக்களின் சிந்தனையும், தாயகத் தமிழர்களின் சிந்தனையும் ஒரே தன்மையை உடையன. பண்பாடும், பழக்கவழக்கங்களும் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒற்றுமைத் தன்மை வாய்ந்தவை. இங்கு திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்களுக்காக எம் நிலத்தில் உயிரையேக் கொடுக்கவும் ரசிகர்கள் இருந்தார்கள். வானொலியில் ஒளிபரப்பப்படும் தமிழ் திரைப்படங்களின் பாடல்கள் எம் நிலத்தை சதா தாலாட்டிக் கொண்டே இருந்தன. காதலையும் வீரத்தையும் பேசிய தமிழ் திரைப்படங்களின் ஆதிக்கம் எம் மண்ணில் மிக அதிகம். ஈழ தமிழ் இனத்திற்காக சிந்தித்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மீது தீவிரமான விசுவாசம் கொண்ட பலரை எம் நிலத்தில் பார்க்க இயலும். ஈழத் தமிழராகிய எங்களுக்கு கடலின் மறு திசையில் வாழுகின்ற எம் தாயக தமிழ் உறவுகளின் மீது மிகுந்த பற்றும் நம்பிக்கையும் உண்டு. நாங்கள் கீழே விழுந்தால் பாய்ந்து வரும் கரமாக எம் தாயக உறவுகள் இருப்பார்கள் என எனக்கெல்லாம் எனது பிறப்பில் தெளிக்கப்பட்ட நம்பிக்கையாகும். என்னையும் எனது தாயக உறவுகளையும் பிரிப்பது நடுவில் ஓடுகின்ற கடல் மட்டுமேத் தவிர உணர்வல்ல. எம்மோடு உதிரமாய் உணர்வாய் உலகமாய்க் கட்டுண்டு கிடப்பவர்கள் எமது தாயக தமிழர்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஈழ நிலத்தில் நடந்த பெரும் யுத்தத்தில் எமது மக்கள்   சிக்குண்டு துன்ப்பபட்டுக் கிடக்கையில் அது தாங்காது தன்னுயிர் தந்து தடுத்திட துடித்த எம் அருமை சகோதரன் முத்துக்குமாரை நான் இந்த நேரத்தில் கண் கலங்க நினைவு கூர்கிறேன். அவன் மரித்துக் கொண்ட இரவில் நான் அழுத கண்ணீர் உண்மையில் செந்நீர். எப்பேர்பட்ட தியாக மனது அவனிற்கு. நினைத்தாலே சிளிர்க்கிறது. ஈழத் தமிழர்களும் தாயகத் தமிழர்களும்பிரிக்க முடியாத தொப்புள் கொடி உறவுகள் தான் என உலகிற்கு உரக்கச் சொன்னவன் முத்துக்குமார். அவனளித்த உயிர் ஈகைதான் தமிழினத்தின் இரு பெரும் தாயக நிலங்களாக ஈழமும் தாயகத் தமிழகமும் கொண்டுள்ள உறவையும் நெருக்கத்தையும் உலகத்தின் கண்களுக்கு திரையிட்டுக் காட்டின.

எம் தாயகத் தமிழர்களுக்கு இத்தனை ஆண்டுகாலம் உங்களையே நம்பி வந்த ஒரு தமிழ் மகன் சிறைக்குள்ளே கொடிய வாதையில் சிக்கிக் கொண்டு தவிக்கிறேன். நான் மட்டுமல்ல, இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கின்ற அனைவருக்காகவும் நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். எங்களையெல்லாம் காணவரும் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மா, நளினியின் தாயார் பத்மா அம்மா, ரவி அம்மா போன்ற தாய்மார்களின் முகத்தில் என்னை காணத்துடித்துக் கொண்டிருக்கும் என் தாயின் சோகத்தைக் காண்கிறேன். குற்றமேதும் செய்யாத மகன்களை பெற்றெடுத்ததைத் தவிர எம் தாய்மார்கள் வேறு எந்த குற்றமும் செய்ததில்லை. நீண்ட அவர்களது துயரம் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். காலம் கடந்து வரும் முடிவென்றாலும் அது உடனேக் கிடைத்தாக வேண்டும். அது மரணமாக இருந்தாலும் கூட. எங்களால் வாழ்விற்கும் சாவிற்கும் நடுவே ஊசலாட இனியும் முடியாது.

அன்பார்ந்த தமிழர்களே! சிறை என்பது தனி மனிதனின் சுதந்திதரத்தை மட்டும் முடக்கிப் போடும் அறையல்ல. மாறாக அவனது உணர்வுகளுக்குள் ஆழமாக ஊடுருவி ஒரு மனிதனின் இயல்பிலேயே கடுமையான தாக்கத்தை ஏற்படுத்திடும் ஆழமான பாதிப்பிற்குப் பெயர்தான் சிறை என்பதை நாங்கள் எங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கிறோம். வரையரையற்ற முடிவிலியான இந்த நீண்ட நெடிய சிறை எங்களுக்கு மிகப் பெரிய காயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆழ்ந்த மௌனங்களில் கட்டுண்டு கிடக்கிற நாங்கள் கடுமையான உளவியல் சிக்கல்களுக்கு உள்ளாகி இருக்கிறோம். கரைந்து கொண்டிருக்கின்ற ஒவ்வொரு நொடியும் கூட எங்களுக்கு வருடமாய்க் கடக்கின்றன. மிக மெதுவாக நத்தைப் போல சுமையோடு நகரும் பகல் பொழுது, அதையும் தாண்டி துளி துளியாய் கசியும் இரவுப் பொழுது என எம் துயரங்களுக்கு பகலிரவு பேதமில்லை. நாட்கள் நகர்ந்து கொண்டே இருக்கின்றன எமக்கு உணர்த்த சிறையில் மாட்டப்பட்டிருக்கும் நாட்காட்டியைத் தவிர வேற எந்த அடையாளமும் இல்லை. நான் சிறைபட்ட பொழுதில் குழந்தையாக இருந்த எனது மகன்  நன்கு வளர்ந்த வாலிபனாக என்னைப் பார்க்க வந்த போதுதான் நான் இழந்தவையெல்லாம் என் நினைவிற்கு வந்தன.

விடுதலைக்கு விலங்கு புத்தகத்தின் முகப்பு அட்டை.